Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 01 பிப்ரவரி (ஹி.ச.)
உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். மேலும், சமீப காலமாக கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் இன்று நடைபெறுகிறது. மேலும், தை பூசத்தை முன்னிட்டு ஈசான்ய குளத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.
அதன்படி, தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று (பிப்ரவரி 1ம் தேதி) காலை 6.13 மணிக்கு தொடங்கி, நாளை (பிப்ரவரி 2ம் தேதி) அதிகாலை 4.45 மணிக்கு நிறைவடைகிறது.
எனவே, இன்று இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பவுர்ணமி நாளில் தை பூசமும் அமைந்திருப்பது சிறப்பாகும்.
அதையொட்டி, கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஈசான்ய குளத்தில் தை பூச தீர்த்தவாரி இன்று நடைபெறுகிறது.
அப்போது, அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் திருவடிவாக அண்ணாமலையார் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.
Hindusthan Samachar / vidya.b