Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகளைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்தியத் துணைத் தேர்தல் ஆணையர்கள் பானு பிரகாஷ், மானேஷ் கார்க், பவன் குமார் சர்மா, சஞ்சய் குமார், ஆசிஷ் கோயல் உட்பட 7 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவினர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தனர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தடைந்த இக்குழுவினர், அங்கிருந்து சாலை மார்க்கமாகக் கார்களில் புதுச்சேரிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
புதுச்சேரியில் முதற்கட்டமாகத் தேர்தல் ஆயத்தப் பணிகள், சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் வாக்குச் சாவடிகளின் தயார் நிலை குறித்து அம்மாநிலத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, அவர்கள் மீண்டும் சென்னைத் திரும்பி தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளனர்.
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் இந்த வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களின் இருப்பு, வாக்குச்சாவடி பாதுகாப்பு மற்றும் தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
அரசியல் கட்சிகள் ஏற்கனவே கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்துத் தீவிரமாக விவாதித்து வரும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / Durai.J