Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 பிப்ரவரி (ஹி.ச)
மக்காச் சோளம் விளைச்சல் இருந்தும், திமுக அரசின் அலட்சியத்தால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர் என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
விருதுநகர், நெல்லை, தென்காசி எனத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த முறை மக்காச் சோளம் அமோகமாக விளைந்துள்ள நிலையில், திமுக அரசின் அலட்சியத்தால் உரிய விலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர் விவசாயிகள்.
ஒருபுறம் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு குவிண்டாலுக்கு ₹2,400 குறைந்தபட்ச ஆதரவு விலை அளித்து வரும் வேளையில், முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசோ மக்காச் சோளத்திற்கான நேரடி கொள்முதல் நிலையங்களைக் கூட அமைக்காமல், வியாபாரிகளின் சிண்டிகேட்டில் சிக்கித் தவிக்கவிட்டு, விவசாயிகள் வயிற்றில் அடித்து வருகிறது. மேலும், மக்காச் சோளத்தின் விலை வீழும் போது, கர்நாடகா போன்ற மாநிலங்கள் ₹250 வரை இழப்பீடு வழங்கும் வேளையில், திமுக அரசோ மக்காச் சோள உற்பத்தியை ஊக்குவிக்க எந்தவொரு முறையான நடவடிக்கையும் எடுக்காமல் மக்காச் சோள விவசாயிகளின் கண்ணீரை வேடிக்கை பார்த்து வருகிறது.
படைப்புழு தொடங்கி காட்டுப் பன்றி வரை பலவற்றின் தாக்குதலில் அவதியுற்ற போதும் துயர் நீக்க தோள் கொடுக்காததோடு, தனது திறனற்ற நிர்வாகத்தால் மேலும் நிலைகுலையச் செய்யும் திமுக அரசு என்னும் கள்ளிச்செடியை வரும் தேர்தலில் களையெடுப்பர் மக்காச் சோள விவசாயிகள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ