Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 12 பிப்ரவரி (ஹி.ச)
மத்திய அரசின் தொழிலாளர் விரோத மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து, நாடு முழுவதும் இன்று அகில இந்திய பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
சிஐடியு (CITU), ஏஐடியுசி (AITUC), எல்பிஎப் (LPF) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) இணைந்து விடுத்த இந்த அழைப்பினை ஏற்று, இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
குறிப்பாக, திருநகர் பகுதியில் உள்ள யூனியன் வங்கி முன்பு சிஐடியு மற்றும் வங்கி ஊழியர் சங்கத்தினர் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். சிஐடியு மாநிலத் தலைவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்டோர் இந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகின்றனர்.
அப்போது திடீரென அவர்கள் மதுரை-திருமங்கலம் சாலையை மரித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மதுரை மாநகரிலிருந்து திருமங்கலம் செல்லும் முக்கிய சாலை என்பதால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டதால் முன்னாள் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து திருநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
மத்திய அரசை கண்டித்து வங்கியை முற்றுகையிட முயன்றவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ