Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 பிப்ரவரி (ஹி.ச)
பிப்ரவரி மாதத்தில் மட்டுமே சென்னை பெருநகர மாநகராட்சி 248 டெண்டர்களை வெளியிட்டிருப்பதும் எப்படி சாத்தியமாகியது? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
திமுக அரசின் அடுத்த ஊழல்!
வரும் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படாத நிலையில், முன்கூட்டியே மாநில நெடுஞ்சாலை துறைக்கு ₹2,000 கோடி ஒதுக்கி, திமுக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது ஒருபுறமிருக்க, சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் நாளொன்றுக்கு சராசரியாக 40 டெண்டர்களை வெளியிட்டு, ₹4,000 கோடி மதிப்பிலான பணிகளை விரைந்து முடிக்க அவசரகதியில் செயல்பட்டுக் கொண்டிருப்பது பல சந்தேகங்களைக் கிளப்புகிறது.
வழக்கமாக அரசு டெண்டர்களை வெளியிட பல மாதங்களாகும் நிலையில், என்றும் இல்லாத சாதனையாக நெடுஞ்சாலை துறைக்கான டெண்டருக்கு மூன்றே நாட்களில் அரசாணை வெளியிடுவதும், பிப்ரவரி மாதத்தில் மட்டுமே சென்னை பெருநகர மாநகராட்சி 248 டெண்டர்களை வெளியிட்டிருப்பதும் எப்படி சாத்தியமாகியது? இவையெல்லாம் தேர்தலுக்கு முன் கமிஷன் கல்லா கட்ட திமுக அரசின் தந்திரமா என்பதை முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் விளக்க வேண்டும்!
நான்கரை ஆண்டுகளாக தமிழக மக்களின் வரிப்பணத்தை சுரண்டித் தின்று கொழுத்தது போதாமல், எஞ்சிய ஓரிரு மாதங்களிலும் மொத்தமாக கமிஷன் அடித்து, வாரி சுருட்டிக்கொள்ள திமுக அரசு திட்டமிடுவது என்றும் நிறைவேறாது!
உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு, கமிஷன் ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்டி, விரைவில் ஊழல் மாளிகையான திமுகவிற்கு ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் பூட்டு போடுவர்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b