Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை 13 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 9,801 வெற்றியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
(பிப்ரவரி 13) வழங்கினார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எளிமைப்படுத்தப்பட்ட 50 சேவைகளையும் தேர்வுக்களம் என்னும் கைபேசி செயலியையும் முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,
இன்று தமிழ்நாட்டுக்கு சூப்பர் மார்னிங். பல தடைகள், சூழ்ச்சிகளை முறியடித்து 1.31 கோடி மகளிருக்கு ரூ. 5,000 மகளிர்உரிமைத் தொகை வரவு வைத்துள்ளோம். மனம் நிறைவாக இருக்கிறது.
வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என நினைக்காமல் அனைவருக்குமான முதலமைச்சராக இருப்பேன் என்று கூறியது போன்று, 5 ஆண்டுகள் அப்படிதான் இருந்தேன். இனியும் அனைவரையும் அனைத்து வகையிலும் உயர்த்தக்கூடிய முதல்வராக இருப்பேன்.
தமிழக அரசின் நிர்வாகம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற அரசின் வருவாய்யை பெருக்க வேண்டும். கல்வியில் சிறந்து போட்டித் தேர்வுகளில் வென்ற உங்களை அரசுப் பணிக்கு வருக வருக என வரவேற்கிறேன்.
மகிழ்ச்சியோடு பொறுப்புணர்வும் எனக்கு கூடுதலாகியுள்ளது. அனைவருக்குமான முதலமைச்சராகத்தான் இந்த 5 ஆண்டுகள் இருந்தேன். அனைவரையும் அனைத்து வகையிலும் உயர்த்தக்கூடிய முதலமைச்சராக உள்ளேன். தமிழ்நாட்டை நம்பர் 1 மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்வு எனக்கு கூடியுள்ளது. பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்க வேண்டும், அடுத்த தலைமுறையை கைதூக்கி விட வேண்டும்.
வாழ்க்கையில் பல தடைகளை கடந்து தேர்விலே வெற்றி பெற்று அரசுப் பணியில் சேர உள்ளீர்கள். கல்வியில் சிறந்து போட்டித் தேர்வில் வென்று மதிப்புமிக்க அரசு ஊழியர்களாக நீங்கள் பொறுப்பேற்க உள்ளீர்கள். 9801 பேரையும் அரசுப் பணிக்கு வருவதை வரவேற்கிறேன். 9801 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நாள் நான் பெருமைகொள்ளும் நாள்.
திராவிட இயக்கம் என்ன சாதித்தது என்று யாராவது கேட்டால் அவர்களுக்கு நீங்கள்தான் பதில். திராவிட இயக்கத்தின் எழுச்சியால் அந்த காலம் மலையேறி விட்டது. தடைகள், சூழ்ச்சிகளை முறியடித்து 1.31 கோடி மகளிருக்கு ரூ.5,000 கலைஞர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
மகளிர் மேம்பாடுதான் திராவிட மாடல் அரசின் சாதனையாக கருதுகிறேன். இளைஞர்கள் நீங்கள்தான் தமிழ்நாட்டின் பலம். இளைஞர்கள்தான் தமிழ்நாட்டின் பலம், இளைஞர்கள் முன்னேறும்போதுதான் தமிழ்நாடும் இந்தியாவும் முன்னேறும். கிராம நிர்வாக அலுவலர் சரியாக பணியாற்றினால் அந்த கிராமமே மாற்றத்தை காணும்.
திராவிட மாடல் அரசை பொறுத்தவரை கலைஞர் உரிமைத் திட்டம், இல்லம் தேடி கல்வி போன்ற முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், உங்களுடன் ஸ்டாலின், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதுவரை 22 லட்சம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
விளையாட்டு இடஒதுக்கீட்டில் 177 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 1.55 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கியுள்ளோம். டிஎன்பிஎஸ்சி மூலம் 45,126 பேர், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 24,927 பேர் அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 12,894 பேர், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 11,244 பேர் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர்.
கருணை அடிப்படையில் 5,899 பேர் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். மேலும் 54,864 பேரும் விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டில் 177 பேரும் அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி மூலமாக 45,126 பேர், யுஎஸ்ஆர்பி மூலமாக 24,927 பேர், டிஆர்பி மூலமாக 12,894 பேர், எம்ஆர்பி மூலமாக 11,244 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். பல்வேறு அரசு துறைகள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 54,864 பேர், விளையாட்டு இடஒதுக்கீட்டில் 177 பேருக்கு வேலை கிடைத்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b