Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 பிப்ரவரி (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம், கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 67,348 சதுர அடி பரப்பளவில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று (பிப்ரவரி 13) திறக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற கீழடியில் அகழாய்வுகளின்போது, கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த அருங்காட்சியத்துக்கு வந்து தொல்பொருள்களை பாா்வையிட்டுச் செல்கின்றனர்.
மேலும், கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடங்களை திறந்தவெளி அருங்காட்சியமாக மாற்றும் பணிகள் ரூ. 24.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வந்த நிலையில், இந்த அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
புதிதாக அமைக்கப்பட்ட திறந்தவெளி அருங்காட்சியம் முன் அலங்காரத் தோரண வாயிலும், அருங்காட்சியகத்தைப் பாா்வையிட வரும் பார்வையாளர்கள் நின்று சுய படம் எடுத்துக் கொள்ள ‘கீழடி நம் தாய்மடி’ என்ற வாசகத்துடன் தென்னை மரத்துடன் கூடிய சுய பட மையமும் தொல்லியல் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b