Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.)
ரமலான் நோன்பு கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க ஒவ்வோர் ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு தமிழக அரசு சார்பில் பச்சரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு ரமலான் நோன்புக் கஞ்சி தயாரிக்க 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரித்து வழங்கும் பொருட்டு பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2026–ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
2026–ஆம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக, பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின்கீழ் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நாள்களுக்கு பச்சரிசி வழங்கிட முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, 8,700 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு ரூ. 20 கோடியே 88 லட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b