நீதிமன்றத்திற்குள்ளேயே நீதிபதிக்குப் பாதுகாப்பில்லை - தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ்
சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.) நீதிமன்றத்திற்குள்ளேயே நீதிபதிக்குப் பாதுகாப்பில்லை தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் கருத்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப
TVK Arunraj


சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.)

நீதிமன்றத்திற்குள்ளேயே நீதிபதிக்குப் பாதுகாப்பில்லை தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் கருத்து தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில், நீதிபதி சுதாகர் அவர்கள் மீது நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே அரிவாள் வீசப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அரசு, மிக முக்கியமான பொது இடமான நீதிமன்றத்திலேயே ஒரு நீதிபதியின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஒரு தனிநபர் நீதிமன்றத்திற்குள் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதத்துடன் தடையின்றி நுழைந்தார் என்பதே, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு பலவீனமாக இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. பொதுமக்களின் உரிமைகளைக் காத்து நீதியை நிலைநாட்டும் நீதித்துறைக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் பாதுகாப்பு பற்றி எண்ணவே அச்சமாக இருக்கிறது.

தலைமை இல்லாத காவல்துறையும், கண்காணிப்பு இல்லாத பாதுகாப்பு முறையும் குற்றவாளிகளுக்குத் துணிச்சலைத்தான் தரும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. இந்த நிர்வாகத் தோல்விக்குத் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். அரசு இனியாவது கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து, நீதிமன்றங்களுக்கும் பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.

ஆனால், அதைச் செய்யுமா என்பது கேள்விக்குறியே! மக்கள் நிச்சயம் இந்தத் திறனற்ற அரசுக்குத் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள் என்று அருண்ராஜ் பதிவிட்டு உள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN