Enter your Email Address to subscribe to our newsletters

கவுகாத்தி, 17 பிப்ரவரி (ஹி.ச.)
அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பதவிக்காலம் வரும் மே 20ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதை முன்னிட்டு அங்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.
கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, அந்த மாநிலத்தில் மொத்தம் 2,49,58,139 வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்காக பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது மற்றும் தேர்தல் தொடர்பான அடிப்படை வசதிகளை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் தரப்பில் ஏற்கனவே விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் குழுவினர் நேற்று(பிப்ரவரி 16) கவுகாத்தி வந்தடைந்தனர்.
இந்த குழுவில் தேர்தல் ஆணையர்கள் எஸ்.எஸ்.சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள இவர்கள், இன்று (பிப்ரவரி 17) மற்றும் நாளை (பிப்ரவரி 18) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட போலீசார் ஆகியோரை நேரில் சந்தித்து கருத்துகளை கேட்க உள்ளனர்.
தேர்தல் தயார் நிலை குறித்து தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் ஒன்றிய ஆயுதப்படை அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான பணிகளால் சுமார் 27 லட்சம் மக்களின் ‘பயோமெட்ரிக்’ விவரங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களுக்கு ஆதார் கார்டு கிடைக்காத சூழல் நிலவுவதுடன், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை பெறுவதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வருகிற சட்டப்பேரவை தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியில் சுமார் 5 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்க பாஜக சார்பில் ஆட்சேபனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b