இடைக்கால நிதிநிலை அறிக்கை வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனா மினிக்கி உரை - எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
மதுரை, 17 பிப்ரவரி (ஹி.ச) 2026 - 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (17.02.2026) காலை 09:30 மணிக்கு கூடியது. அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்
இடைக்கால நிதிநிலை அறிக்கை வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனா மினிக்கி உரை - எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்


மதுரை, 17 பிப்ரவரி (ஹி.ச)

2026 - 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (17.02.2026) காலை 09:30 மணிக்கு கூடியது.

அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து வேளாண் இடைக்கால பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார்.

இந்நிலையில் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்,

திராவிட மாடல் என்ற பெயரால் நடத்தப்பட்ட ஏமாற்று மாடல் திமுக அரசு தனது கடைசி பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாபெரும் காதுகுத்தும் விழா அழைப்பிதழை இன்று காலை அனைத்து ஊடகங்களுக்கும் அதிமுக சார்பில் அளித்திருந்தோம்.

எந்த அளவுக்கு இந்த அரசு மக்களுக்கு காது குத்துகிறது என்பதை நாட்டு மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக இந்த அழைப்பிதழைக் கொடுத்துள்ளோம். அதனை ஊடகங்கள் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பது அவர்களது கடமை ஆகும்.

2021ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்ற பொதுத்தேர்லின் போது 525 அறிவிப்புகள் வெளியிட்டார்கள். இதுவரைக்கும் அதில் நான்கில் ஒரு பங்கு அறிவிப்பு கூட நிறைவேற்றவில்லை.

அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாகச் சொன்னார்கள். ஆனால் அதற்கு மாறாகப் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தைத்தான் அறிவித்திருக்கிறார்கள்.

அரசு ஊழியர்களையும் இந்த அரசு ஏமாற்றி விட்டது. அதோடு பல துறைகளில் பணிபுரிகின்ற அலுவலர்களுக்கு பல்வேறு உறுதிமொழிகளை அளித்தார்கள். சத்துணவு அமைப்பாளருக்கு வாக்குறுதி கொடுத்தார்கள் நிறைவேற்றவில்லை.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு வாக்குறுதி கொடுத்தார்கள் நிறைவேற்றவில்லை. செவிலியருக்கு வாக்குறுதி கொடுத்தார்கள் நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கு வாக்குறுதி கொடுத்தார்கள் நிறைவேற்றவில்லை.

இப்படிப் பல துறையில் இருக்கின்ற அலுவலர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று எல்லோருமே போராட்டத்தில் ஈடுபட்டு தமிழகம் ஒரு போராட்ட களமாக மாறியிருக்கின்றது.

கடந்த ஐந்து ஆண்டுகளைப் போல இந்த ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனா மினிக்கி உரையாகத்தான் இருக்குதே தவிர உருப்படியாக எதுவும் இல்லை.

பட்ஜெட் சொத்தையான அத்திப்பழம் போல உள்ளது. வெளியே இருந்து பார்த்தால் அழகாக இருக்கும். உள்ளே பார்த்தால் சொத்தையாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b