லைகா நிறுவனம் - நடிகர் விஷால் இடையிலான வழக்கு - விஷாலின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.) லைகா நிறுவனத்துக்கான கடனை திருப்பி செலுத்தும் விவகாரத்தில், நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த, அவகாசம் வழங்கக் கோரி, நடிகர் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து
சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.)

லைகா நிறுவனத்துக்கான கடனை திருப்பி செலுத்தும் விவகாரத்தில், நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த, அவகாசம் வழங்கக் கோரி, நடிகர் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, விஷால் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

மேலும், வழக்கு எண்ணில் 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய ஆறு வார கால அவகாசம் வழங்கக் கோரி விஷால் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், பணத்தை திரட்ட அவகாசம் தேவைப்படுவதால், 10 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் செய்வதற்கு 6 வார கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்து எட்டு வாரங்கள் கடந்து விட்டதால், அவகாசம் வழங்க முடியாது எனக் கூறி, விஷாலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam