Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)
இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது இன்றியமையாத அடையாளச் சான்றாக உருவெடுத்துள்ளது.
வங்கி கணக்குத் தொடங்குவது முதல் அரசாங்கத்தின் நலத்திட்டங்கள், மானியங்கள், சிம் கார்டு வாங்குவது, பான் கார்டு இணைப்பது என அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அத்தியாவசியமாகிவிட்டது.
குறிப்பாக, பெண்களின் வாழ்வில் திருமணத்திற்குப் பிறகு பெயர், முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களை மாற்ற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவது இயல்பு.
பெரும்பாலான பெண்கள் தங்களது ஆதார் அட்டையில், தந்தையின் பெயரை நீக்கிவிட்டு கணவரின் பெயரைப் பதிவு செய்ய விரும்புகின்றனர். இதற்கான எளிய வழிமுறைகளை அரசு அதிகாரிகள் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஆதார் விவரங்களை புதுப்பிக்கும் அதிகாரப்பூர்வ அமைப்பான UIDAI, இந்த வசதியை இணையதளம் மற்றும் நேரடி சேவை மையம் என இரண்டு வழிகளில் வழங்குகிறது.
பெரும்பாலானோர் வீட்டில் இருந்தபடியே மொபைல் அல்லது கணினி மூலம் விண்ணப்பிக்க முடியும் என்பதால், ஆன்லைன் முறையையே விரும்புகின்றனர். உங்களிடம் சரியான ஆவணங்கள் இருந்தால், இந்த நடைமுறையை சில நிமிடங்களில் முடித்துவிடலாம்.
இணையதளத்தில் மாற்றங்களைச் செய்ய, அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று, உங்கள் ஆதார் எண்ணைப் பதிவிட்டு OTP மூலம் உள்நுழைய வேண்டும். பின்னர் ஆதாரை ஆன்லைனில் புதுப்பிக்கவும் என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உறவு விவரங்கள் பகுதியில் கணவரின் பெயரைப் பதிவிடவும்.
அதன் பிறகு, தேவையான ஆவணங்களை தெளிவாக ஸ்கேன் செய்து பதிவேற்றவும். அனைத்து விவரங்களையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பம் சமர்ப்பித்தவுடன், உங்களுக்கு ஒரு சேவை கோரிக்கை எண் (SRN) வழங்கப்படும். இந்த எண்ணின் மூலம் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அவ்வப்போது இணையத்தில் கண்காணிக்கலாம்.
பொதுவாக, இந்த மாற்றத்திற்கு 7 முதல் 10 வேலை நாட்கள் வரை ஆகும். நீங்கள் அளித்த விவரங்கள் சரியாகவும், ஆவணங்கள் தெளிவாகவும் இருந்தால், மிக விரைவாக ஒப்புதல் கிடைக்கும்.
இணைய வசதி இல்லாதவர்கள், அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று நேரிலும் இந்த மாற்றத்தைச் செய்யலாம். அங்கு திருத்தப் படிவத்தை பூர்த்தி செய்து, திருமணச் சான்றிதழ், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு போன்ற அடையாளச் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
கைரேகை சரிபார்ப்பு முடிந்ததும், உங்களுக்கு ஒரு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். இந்த முறையில், பெயர் மாற்றம் நடைமுறைக்கு வர 20 முதல் 25 நாட்கள் வரை ஆகலாம்.
பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும்போது, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் பயன்பாட்டில் இருப்பது மிகவும் முக்கியம். OTP பெற முடியாவிட்டால், ஆன்லைன் செயல்முறை முழுமையடையாது. தவறான தகவல்கள் அல்லது தெளிவில்லாத ஆவணங்கள் பதிவேற்றப்பட்டால், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.
எனவே, அனைத்து விவரங்களையும் கவனமாக உள்ளிட்டு சரியான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம், ஆதாரில் கணவரின் பெயரைப் புதுப்பிக்கும் செயல்முறையை எளிதாக நிறைவு செய்யலாம்.
Hindusthan Samachar / JANAKI RAM