Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச.)
2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை திமுக நேற்று தொடங்கியது.
வழக்கம்போல இந்த முறையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் முதலில் பேச்சு நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து, இன்று காலை மனிதநேய மக்கள் கட்சி, மதிமுகவுடன் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழு முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக குழுவினர் கூறுகையில்,
இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக நடைபெற்றது.
எங்கள் (ம.தி.மு.க.) கட்சியின் வேண்டுகோள்களையும், கோரிக்கைகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சுவார்த்தை குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம்.
இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தையின் முடிவுகளை நாங்கள் தெரிவிக்க உள்ளோம்.
திமுகவிடம் மாநிலங்களவை சீட் கேட்டுள்ளோம். கடந்த முறையை விட கூடுதல் தொகுதி கேட்டுள்ளோம்.
கூடுதல் இடங்கள் எவ்வளவு என்பதை பிறகு தெரியவரும். தொகுதிகளை குறைத்துக்கொள்ளுமாறு திமுக கேட்கவில்லை.
சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் அது முடிவில்லாதது. அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்குக் கூப்பிடுவார்கள்.
அதன்பிறகு தகவல் கொடுப்பார்கள். அதற்குப் பிறகு வருவோம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அதனுடைய சின்னத்தில் தனியாக நிற்கும்.
இவ்வாறு தெரிவித்தனர்.
கடந்த பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது.
ஆனால் வரும் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடப்போவதாக மதிமுக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b