Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை மின்சார ரயில் இயக்கத்தில் நிலவும் குளறுபடிகளுக்கு திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன், வில்சன், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில் ரயில் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிக்கு திமுக எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், ரயில் சேவை குறைப்பை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு வலியுறுத்தியுள்ளனர்.
இதுபற்றி திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாள்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு வருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது.
ஏற்கனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
குறிப்பாக வரும் வாரங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்,
என்று பதிவிட்டுள்ளார் .
Hindusthan Samachar / vidya.b