Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 24 பிப்ரவரி (ஹி.ச.)
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் லீக் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் போட்டியிட்டன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரரான பிரண்டன் கிங் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷாய் ஹோப் 14 ரன்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஹெட்மயர் 85 ரன்கள் எடுத்தார். ரோவ்மேன் பவல் 59 ரன்கள் எடுத்தார். இறுதியில் சைபர்ட் அதிரடியாக விளையாட, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே அணியின் சார்பில் நகர்வா மற்றும் முசர்பானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது.
அந்த அணியில் முதலாவதாக களமிறங்கிய மாருமணி 14 ரன்களும், பென்னட் 5 ரன்களும் எடுத்து வெளியேறிய நிலையில், அடுத்து விளையாட வந்த வீரர்களும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய பிராட் எவன்ஸ் 23 பந்துகளில் 41 ரன்களும், டியான் மேயர்ஸ் 28 ரன்களும், சிக்கந்தர் ராசா 27 ரன்களும் எடுத்தனர்.
முடிவில் ஜிம்பாப்வே அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக மோட்டி 4 விக்கெட்டுகளையும், ஹெசைன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டனர்.
இதன் மூலம் ஜிம்பாப்வே அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
Hindusthan Samachar / JANAKI RAM