Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.)
கிருஷ்ணகிரி அருகே இரண்டரை வயதுக் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த திமுக நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி அருகே இரண்டரை வயதுக் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த திமுக நிர்வாகி கைது – பச்சிளம் குழந்தைக்குக் கூட பாதுகாப்பில்லாத திமுக அரசை வரும் தேர்தலில் வீட்டிற்கு அனுப்புவது தான் ஒரே தீர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே இரண்டரை வயதுக் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்திருப்பதாக திமுகவின் இளைஞரணி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
பச்சிளம் குழந்தைகள், கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள், வீட்டில் வசிக்கும் வயதான முதியவர்கள் என யாருக்குமே பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழகத்தை மாற்றிவிட்டு, பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் எனப் பெருமை பேசுவதும், பல கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்வதும் வெட்கக் கேடானது.
கஞ்சா விற்பனையில் தொடங்கி கள்ளச்சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்த திமுக நிர்வாகிகளைக் கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்ததன் விளைவே, தற்போது அரங்கேறியிருக்கும் இந்த கொடூர சம்பவத்திற்கு அடிப்படை காரணம் எனப் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, பச்சிளம் குழந்தை என்று பாராமல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குரூர மனம் படைத்த திமுக நிர்வாகிக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தும் இந்நேரத்தில், தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக வாழ, வரும் தேர்தலில் திமுகவை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்புவது தான் ஒரே தீர்வாக அமையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b