Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 28 பிப்ரவரி (ஹி.ச.)
கோவை மதுக்கரையில் கல்விப்பணியில் முப்பதாண்டுகளைக் கடந்து சாதனை படைத்து வரும் ஸ்ரீ பி.மல்லையன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முப்பதாண்டு முத்து விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் சண்முகம் மற்றும் செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், பொருளாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
விழாவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், இந்திய தனியார் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் கௌரவ ஆலோசகருமான பேராசிரியர் டாக்டர் பாலகுருசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
கவுரவ விருந்தினராக கோயம்புத்தூர் கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் தலைவரும் நீதிபதியுமான சோமசுந்தர் பங்கேற்றார்.
முன்னதாக விழாவில் சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளி மாணவர்கள் பேண்டு வாத்தியங்களுடன், சிலம்பம், ஸ்கேட்டிங், நாட்டு நல பணி திட்ட குழுவினர் அணிவகுத்து வரவேற்பு அளித்தனர்.
விழாவில் பேசிய டாக்டர் பாலகுருசாமி,
சுதந்திரம் அடைந்த போது இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் 12 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 80 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சுட்டி காட்டிய அவர்,ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பது அந்நாட்டு மக்களின் கல்வி அறிவு மட்டுமே என கூறினார்.
அந்த பணியை கடந்த முப்பது ஆண்டுகளாக இப்பகுதி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் ஸ்ரீ மல்லையன் பள்ளி செய்து வரும் சேவையை தாம் பாராட்டுவதாக தெரிவித்தார்.
விழாவில், கடந்த ஆண்டுகளில் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா மற்றும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
தொடர்ந்து மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன..
விழாவில் பள்ளியின் முதல்வர்,ரேகா மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள்,மதுக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam