Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 03 பிப்ரவரி (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது சிலைக்கு இன்று (பிப்ரவரி 03) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது
காங்கிரஸ் ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை விட பிரதமர் மோடி பிரதமர் ஆன பின்னர்தான் தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதனால்தான் மத்திய பட்ஜெட்டை அதிமுக வரவேற்கிறது. அதிமுக எப்போதும் யாருக்கும் அடிமை கிடையாது.
தமிழகத்தில் மீறிப் பேசும் திமுக, டெல்லிக்கு சென்றால் தங்களை காப்பாற்றிக் கொள்ள மத்திய அரசுக்கு அடிபணிந்து போவதை வழக்கமாக வைத்துள்ளது. அதிமுக - பாஜக அன்பான கூட்டணி, திமுக - காங்கிரஸ் வைத்துள்ளதுதான் அடிமைக் கூட்டணி. அனைத்து கருத்து கணிப்புகளிலும் அதிமுக கூட்டணி முன்னணியில் இருப்பதாக வந்து கொண்டிருக்கின்றன. இதை பொறுக்க முடியாதவர்கள் ஊழல் கட்சி எனக் கூறி வருகின்றனர்.
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆர் அரசியலில் நடிக்கவில்லை. இன்று வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள். அரசியலில் நடிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரூ.200 டிக்கெட்டை ரூ.2,000-க்கு விற்பனை செய்து சம்பாதித்தவர்கள், ஊழல் குறித்து பேசுகின்றனர்.
பட்டாசு, தீப்பெட்டிக்கு ஜி.எஸ்.டி வரியை குறைக்க வைத்தது அதிமுக. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மக்களுக்கு வேண்டிய திட்டங்களை பெறும் முதல்வர் தான் தமிழகத்துக்கு தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b