Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 04 பிப்ரவரி (ஹி.ச.)
கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்று காலை சபை கூடியதும், இந்திய பொருட்களுக்கான அமெரிக்க வரி குறைப்பு நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களை குறிப்பிட்டு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டு மதியம் மீண்டும் கூடியது.
அப்போது, ராணுவ முன்னாள் தளபதி எழுதிய புத்தகம் குறித்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் சபையில் மீண்டும் பேச முயன்றார்.
அவருக்கு ஆதரவாக காகிதங்களை கிழித்தெறிந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால், தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் உட்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று
(பிப்ரவரி 04) லோக்சபா கூடியது எம்பிக்கள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது. இதனால் அவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரத்தில் ராஜ்யசபா நடைபெற்று வருகிறது.
எம்பிக்கள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இவர்களது போராட்டத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதத்தில் எம்பிக்களின் கருத்துக்களுக்கு லோக்சபாவில் பிரதமர் மோடி இன்று பதிலுரை ஆற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b