Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை தி மயிலாப்பூர் இந்து பர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
பின்னர் 100 கோடி ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் வைப்புத்தொகையாகச் செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது.
ஆனால் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி நிபந்தனையை நிறைவேற்றவில்லை என பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டது.
இந்த முறையீட்டை ஏற்று கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் தேவநாதன் யாதவை கைது செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, தேவநாதன் யாதவ் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு தேவநாதன் யாதவ் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சொத்துக்களை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க தயாராக இருப்பதாகவும் இதற்காக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ராஜசேகர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் சொத்துக்கள்
அடையாளம் காணப்பட்டு பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், எனவே அவரை ஜாமீனில் விடுவிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
முதலீட்டாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர். திருமூர்த்தி, ஏற்கனவே ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கும் தற்போதும் எந்த சூழலும் மாறவில்லை என்றும் தொடர்ந்து விசாரணை நடத்த கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை எதையும் அவர் நிறைவேற்றவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ராஜசேகர்,
தேவநாத யாதவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam