Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 06 பிப்ரவரி (ஹி.ச.)
பரவி வரும் பறவைக்காய்ச்சல், பொதுமக்களுக்கு கவனம் தேவை எனவும் எதிர்கால நோய்த்தொற்றைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த ஜனவரி மாதம் சென்னை அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென அதிகளவில் செத்து மடிந்த காகங்களை எடுத்து ஆய்வு செய்ததில், உயிரிழந்த காகங்களுக்கு H5N1 வைரஸ் தொற்று, அதாவது பறவைக்காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழகத்தில் இதுவரை பறவைக்காய்ச்சலால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் கண்டறியப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கக் கூடிய தகவலாக இருந்தாலும் கூட, எதிர்கால நோய்த்தொற்றைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
எனவே, இறக்கும் பறவைகளை யாரும் கைகளால் தொட்டு அப்புறப்படுத்த வேண்டாம் எனவும், பறவைப் பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளைப் பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டுமெனவும், குழந்தைகள் மற்றும் முதியவர்களை முடிந்த வரையில் பறவைகள் மற்றும் விலங்குகளின் நேரடி தொடர்பில் இருந்து பாதுகாக்க வேண்டுமெனவும், காய்ச்சல் சளி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுமாயின் மக்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டுமெனவும் தமிழக மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ