Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 6 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ளவர்களுக்கு இன்று முதல் விருப்ப விண்ணப்ப விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விருப்ப விண்ணப்பங்களை பிப்ரவரி 14ஆம் தேதி வரை தவெக தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் பனையூரில் விருப்ப விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது.
நாளை முதல் காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை விருப்ப விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஆர்வமுள்ளவர்கள் அதனைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் விருப்ப விண்ணப்பத்தை அந்தக் கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் சார்பில் கட்சி நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.
தவெக பொதுச் செயலாளா் என். ஆனந்த், தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் உள்பட பலர் ரூ. 100 செலுத்தி தங்களுடைய விருப்ப விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டனர்.
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள் விருப்ப விண்ணப்பம் பெற குழுமியுள்ளனர்.
இந்நிலையில், விருப்ப விண்ணப்பப் படிவத்தில் கட்சி சார்பாகப் போராட்டம் நடத்தி சிறை சென்றுள்ளீா்களா? என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது.
இது தவெக தொண்டர்களிடையே ஒரு வித அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் எங்கள் தெருக்களில் சாதாரணமாக இருக்க முடியவில்லை.
வாகனங்களை வீட்டின் முன்பு நிறுத்துகின்றனர்.
தடுப்புகள் ஏற்படுத்துகின்றனர்.
மிகவும் சிரமமாக இருக்கிறது என்று தவெக அலுவலகம் அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM