Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 பிப்ரவரி (ஹி.ச.)
உண்ணாநிலை போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக பணி நிறுத்தம் செய்யப்பட கொசு ஒழிப்புப் பெண் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கொசு ஒழிப்புப் பணியாளர்கள், நேற்றைய தினம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் உண்ணாநிலைப் போராட்டத்தை, தமிழ்நாடு டிபிசி தொழிலாளர் சங்கம் சார்பில், காவல்துறை அனுமதியோடு மேற்கொண்டனர்.
இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த உண்ணாநிலை போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, தர்மபுரி மாவட்டம், கம்பயநல்லூர் பேரூராட்சியை சேர்ந்த பத்து கொசு ஒழிப்புப் பெண் பணியாளர்களை, வேலைக்கு வர வேண்டாம் என நிறுத்தியுள்ளனர்.
இத்தகைய தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
பத்து பெண் பணியாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்கிட வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b