Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மார்ச் (ஹி.ச)
நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் உணவகங்கள் மூடப்படும் அபாயம் – கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்ற சூழல் காரணமாக தமிழகத்தில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சாதாரண தேநீர் கடைகளில் தொடங்கி பெரிய விடுதிகள் வரை அனைத்து வகையான உணவகங்களுக்கும் அடிப்படை தேவைகளில் ஒன்றான கேஸ் சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டிருப்பதால் உணவகங்கள் அனைத்தும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடப்படும் பட்சத்தில் கிராமப்புறங்களில் இருந்து சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் உணவுத் தேவை பாதிக்கப்படுவதோடு, அந்த உணவகங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்திடுவதை உறுதி செய்திட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b