பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம்
திருச்சி, 10 மார்ச் (ஹி.ச.) அதிமுக-பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் திருச்சி, பஞ்சப்பூர் அருகே நாளை (11-03-2026) நடைப்படவுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார். இதனால், நாளை போக்குவரத்தில் அதிரடி மாற்றம் செய
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம்


திருச்சி, 10 மார்ச் (ஹி.ச.)

அதிமுக-பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் திருச்சி, பஞ்சப்பூர் அருகே நாளை (11-03-2026) நடைப்படவுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.

இதனால், நாளை போக்குவரத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரருக்குள் வந்து செல்லும் நகர பேருந்துகள் மற்றும் வெளியூர் பேருந்துகள் கீழ்கண்ட வழித்தடங்களில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, பெரம்பலூர், சேலம் மார்க்கத்திலிருந்து வரும் நகர பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் மன்னார்புரத்தில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கீழே இறங்கி சர்வீஸ் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி கே.கே.நகர், எல்.ஐ.சி. காலனி, உழவர் சந்தை, சாத்தனூர் குளம் வழியாக சென்று வலதுபுறம் திரும்பி செட்டியப்பட்டி வாட்டர் டேங்க் வழியாக பஞ்சப்பூர் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

மதுரை மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் பஞ்சப்பூர் வந்து அங்கிருந்து வலது பக்க சாலையில் திரும்பி எதிர் திசையில் பேருந்து நிலையத்திற்கு பின் புறமாக வரவேண்டும்.

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை மார்க்கமாக செல்லும் நகர பேருந்துகள் வழக்கமான பாதையில் வெளியே செல்ல வேண்டும்.

கரூர், கோயம்புத்தூர், சேலம், சென்னை செல்லும் பேருந்துகள் பின்புறமாக வெளியே வந்து செட்டியப்பட்டி, சாத்தனூர் குளம், ஒலையூர் வழியாக கே.கே. நகர் வழியாக இயர்லஸ் ரோட்டை அடைந்து டிவிஎஸ் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

திருச்சி மாநகரை கடந்து செல்லும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் செல்லவேண்டிய மாற்று வழித்தடங்கள்:

சென்னை, பெரம்பலூர் மார்க்கத்திலிருந்து சேலம், திண்டுக்கல், மதுரை செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்துநெ.1 டோல்கேட், முசிறி, குளித்தலை, மணப்பாறை, துவரங்குறிச்சி வழியாக சென்று வரவேண்டும்.

சென்னை, பெரம்பலூர் மார்க்கத்திலிருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து குன்னம், அரியலூர், திருவையாறு வழியாக சென்று வரவேண்டும்.

சேலம் மார்க்கத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் கனரக வாகனங்கள் முசிறி, பெரம்பலூர், குன்னம், அரியலூர் வழியாக சென்று வரவேண்டும்.

கரூர் மார்க்கத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலையிலிருந்து திருப்பி விடப்பட்டு மணப்பாறை, விராலிமலை வழியாக செல்லவேண்டும்.

புதுக்கோட்டையிலிருந்து சென்னை, பெரம்பலூர் செல்லும் கனரக வாகனங்கள் கந்தர்வக்கோட்டை, தஞ்சாவூர், திருவையாறு, அரியலூர் வழியாக செல்ல வேண்டும்.

புதுக்கோட்டையிலிருந்து கரூர், திண்டுக்கல், சேலம் செல்லும் கனரக வாகனங்கள் விராலிமலை, மணப்பாறை, குளித்தலை, முசிறி வழியாக செல்லவேண்டும்.

அரியலூரிலிருந்து சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூர், துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, துவரங்குறிச்சி வழியாக செல்லவேண்டும்.

உள்ளூர் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் முசிறி, திருச்சி மாநகருக்குள் வராமல் பி.எல்.ரவுண்டானாவிலிருந்து திருப்பி விடப்பட வேண்டும். நம்பர் ஒன் டோல்கேட்டிலிருந்து திருப்பி விடப்படவேண்டும். இதேபோல ஜீயபுரம், ராம்ஜி நகர், மணிகண்டம், மாத்தூர் ரவுண்டானாவிலிருந்து வரும் வாகனங்கள் திருச்சி மாநகருக்குள் வராமல் திருப்பி விடப்படவேண்டும்.

திசை திருப்பும் இடங்கள்:

காஜாமியான் சாலை, மன்னார்புரம், அரிஸ்டோ பாலம், வண்ணான் கோயில், மணப்பாறை, விராலிமலை, மணிகண்டம், மாத்தூர் சந்திப்பு, துவாக்குடி, பால்பண்ணை சந்திப்பு, ஹூண்டாய் நிறுவனம், சஞ்சீவி நகர் சந்திப்பு, எண் 1 டோல்கேட்.

மேற்கண்ட தகவல் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b