Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 11 மார்ச் (ஹி.ச.)
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்த தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறைகள் பிப்ரவரி 8-ஆம் தேதி https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தொடங்கியது.
மார்ச் 8-ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணியுடன் அதற்கான அவகாசம் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் 11 ஆம் தேதி இரவு 9 மணிவரையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
நிகழ் கல்வியாண்டுக்கான இளநிலை நீட் தேர்வு நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதி பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 552 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்தத் தேர்வுக்கு 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை உள்பட 30 நகரங்களிலும், துபை, அபுதாபி, தோஹா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூா் உள்ளிட்ட 16 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது.
வரும் மார்ச் 10 முதல் 12-ஆம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். தேர்வு மையம், ஹால்டிக்கெட் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறுகிறது. மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும்.
தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்களை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) https://www.nmc.org.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b