Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 11 மார்ச் (ஹி.ச.)
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்க பிரதமர் மோடி இன்று பயணம் மேற் கொண்டார்.
முதலில் கேரள மாநிலம் சென்ற பிரதமர் மோடி அம்மாநிலத்தில் இருந்து, இன்று மாலை 4 மணியளவில், திருச்சி வருகை தந்தார்.
தமிழர் பாரம்பரியமான வேஷ்டி சட்டை அணிந்து வந்த அவருக்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிறகு அங்கிருந்து பஞ்சப்பூருக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், 5,650 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்.
புதிய திட்டங்களுக்கு, அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடிக்கு, எல்.முருகன் நினைவுப்பரிசு வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு சால்வை அணிவித்தார்.
பொருநை அருங்காட்சியகம் நினைவு சின்னத்தை பிரசாக வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
திருச்சிக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய நிகழ்ச்சி தமிழகத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமானது. இன்று, 5,650 ரூபாய் கோடி திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டங்கள் இணைப்பு திறனை மேம்படுத்தி தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும்.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், குழாய் வழித்தத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தால் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு பயனளிக்கும் 9 லட்சம் குடும்பங்களுக்கும், நூற்றுக்கணக்கான வர்த்தக நிறுவனங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு கிடைப்பதால் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தும். நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும். இயற்கை எரிவாயு இயற்கைக்கு உகந்தது. காற்று மாசினை குறைக்கும்.
இந்த திட்டம், 4 கோடி மரங்கள் நடுவதற்கு இணையானது.
சென்னையில் ஐஓசி நிறுவனத்தின் லூப் பிளெண்டிங் ஆலை நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய ஆலைகளில் இதுவும் ஒன்று தமிழகத்திலும், மற்ற மாநிலங்களிலும், இந்த ஆலையானது தொழிற்சாலைகளின் தேவையை நிறைவேற்றி வைக்கும் மசகு எண்ணெய் இறக்குமதி குறைப்பதோடு, நாட்டின் பணத்தை மிச்சப்படுத்தும்.
370 கிமீ, தூரத்திற்கு ஊரக சாலையை துவக்கி வைத்துள்ளோம். பிரதமரின் ஊரக சாலை திட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களால் பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கும் சிரமமின்றி பயணிக்க முடியும். விவசாயிகள், தங்களது விளைபொருட்களை விற்கவும், மூலப்பொருட்களை வாங்க முடியும். ஒவ்வொரு சாலையும், ஊரக பொருளாதாரத்தை மேம்படுத்தி எளிதாக வாழும் திறனை அதிகரிக்கிறது.
கடந்தாண்டு ஆடி திருவாதிரை விழாவிற்கு கங்கைகொண்ட சோழபுரம் வந்தது மகிழ்ச்சி மன்னர் ராஜேந்திர சோழன் எழுப்பிய கோவிலின் கட்டுமானத்தின் ஆயிரமாவது ஆண்டை கொண்டாடினோம். இக்கோவில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
அங்கு நெடுஞ்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.
தற்போதைய நெடுஞ்சாலை, கோவிலுக்கு அருகில் இருப்பதால், சுற்றுலா பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் பாதுகாப்பு குறித்த கவலை எழுப்பியது. புதிய புற வழிச்சாலை அமைப்பால் மற்ற வாகனங்கள், கோவிலுக்கு அப்பால் திருப்பிவிடப்படும். அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.
மதுரை வந்த போது, அம்ரித் பாரத் திட்டத்தின்படி மறுசீரமைக்கப்பட்ட 8 ரயில் நிலையங்கள் துவக்கிவைக்கப்பட்டது.
இன்று புதிய ரயில்கள் துவக்கி வைக்கப்பட்டது. இவை நாகர்கோயில், கோவை, ராமேஸ்வரம், நெல்லை, மயிலாடுதுறை, காரைக்குடி ஆகிய இடங்களை மற்ற பகுதிகளோடு இணைக்கிறது.
இந்த புதிய ரயில் சேவையால் சுற்றுலா துறை வளர்ச்சி அடைவதோடு, உள்ளூர் பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்குவதுதான் எங்களின் நோக்கம். தமிழக மக்களின் நலனுக்கு முழு அர்ப்பணிப்போடு இருக்கிறது.
மத்திய அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடுகிறோம். மேலும் தொடர்ந்து பாடுபடுவோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி தொடங்கிய புதிய திட்டங்கள் பின்வருமாறு :
நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், 3,680 கோடி ரூபாய் முதலீட்டில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் திட்டத்திற்கு, பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
சென்னை அடுத்த மணலியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின், 1,490 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள, மசகு எண்ணெய் கலவை ஆலையை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 370 கி.மீ, நீளமுள்ள, 89 கிராமப்புற சாலைகளை திறந்து வைத்தார்.
தேசிய நெடுஞ்சாலை 81ல், கங்கைகொண்ட சோழபுரம் அருகே, பசுமை புறவழிச்சாலை அமைக்க, அடிக்கல் நாட்டினார்.
இரண்டு அம்ரித் பாரத் விரைவு ரயில்கள். இரு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணியர் ரயில் சேவையையும், மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
போன்ற நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்றைய நிகழ்வில் தொடங்கி வைத்தார்.
Hindusthan Samachar / vidya.b