Enter your Email Address to subscribe to our newsletters

இம்பால், 11 மார்ச் (ஹி.ச.)
மணிப்பூர் மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இம்பால் நகரில் உள்ள இமா மார்க்கெட் பகுதியில் மக்கள் போராட்டம் இன்று வலுவடைந்துள்ளது.
அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர். இப்போராட்டத்தின் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டதையை தொடர்ந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
போலீசார் கூட்டத்தினரை கலைந்து போகும்படி கூறினர். ஆனால், அவர்கள் கலையாமல் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இந்த சம்பவத்தில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஜே.எப்.டி. என்ற அமைப்பின் உதவி செயலாளரான நவோரெம் வங்கம்பா கூறும்போது,
சட்டவிரோத குடியேறிகளை முறையாக அடையாளம் கண்டு. அதன்பின்னர் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்தப்பட வேண்டும். இதற்கு 1951-ம் ஆண்டை கணக்கீடாக கொள்ள வேண்டும்.
அப்படி சட்டவிரோத குடியேறிகளை தனியாக பிரிக்காமல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டால், அவர்கள் இந்திய குடிமக்களாக அங்கீகரிக்கப்படும் ஆபத்து உள்ளது. இது உண்மை மற்றும் அரசியலமைப்பை மீறுவது ஆகும்.
அதனால், தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கப்பட வேண்டும். நாங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பை தள்ளி வைக்கும்படி மத்திய உள்துறை அமைச்சரிடம் நினைவூட்டல் கடிதம் ஒன்றை கொடுத்து இருக்கின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்
Hindusthan Samachar / vidya.b