Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 12 மார்ச் (ஹி.ச)
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் பிரபல ரௌடி நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தாமன் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
இருவர் தலைமறைவாக உள்ளனர். வழக்கின் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதனிடையே இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 14 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பிணை வழங்கியது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே கோரிக்கையுடன், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ள 14 பேரில், அஞ்சலை மற்றும் ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடி தவிர்த்து, 12 பேரின் பிணை உத்தரவை ரத்து செய்யப்பட்டது.
பிணை ரத்து செய்யப்பட்ட 12 பேரும் கடந்த மார்ச் 6-ஆம் தேதி நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, சரண் அடைவதற்கு 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என அவர்கள் கூறியிருந்த நிலையில், கால அவகாசத்தை மார்ச் 13-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதனிடையே, பிணை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று(மார்ச் 12) விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேரின் ஜாமீனை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு ஒரு வாரத்தில் பதில்மனு தாக்கல் செய்து உத்தரவிடப்பட்டது.
மேலும், வழக்கின் விசாரணை ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b