Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 மார்ச் (ஹி.ச.)
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, 2025-ஆம் ஆண்டில் வெள்ளம், திடீர் வெள்ளப்பெருக்கு,
மேக வெடிப்பு, நிலச்சரிவுகள் மற்றும் ‘மோந்தா’ புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கு, ₹1,912.99 கோடி கூடுதல் நிவாரண நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த உதவியானது, தேசிய பேரிடர் மீட்பு நிதியத்திலிருந்து வழங்கப்படும்; எனினும், அந்த ஆண்டிற்கான மாநிலப் பேரிடர் மீட்பு நிதியத்தில் உள்ள தொடக்க இருப்பில் 50 சதவீதத் தொகையைச் சரிசெய்த பிறகு இந்த உதவி வழங்கப்படஉள்ளது.
மத்திய அரசாங்கத்தின் தகவலின்படி, ஆந்திரப் பிரதேசத்திற்கு ₹341.48 கோடியும், சத்தீஸ்கருக்கு ₹15.70 கோடியும், குஜராத்திற்கு ₹778.67 கோடியும், இமாச்சலப் பிரதேசத்திற்கு ₹288.39 கோடியும், நாகாலாந்திற்கு ₹158.41 கோடியும், ஜம்மு காஷ்மீருக்கு ₹330.34 கோடியும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு மாநிலப் பேரிடர் மீட்பு நிதியத்தின் கீழ் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிதிகளுக்கு மேலதிகமாகவே, இந்த கூடுதல் உதவி வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2025–26 நிதியாண்டில், மாநிலப் பேரிடர் மீட்பு நிதியத்தின் கீழ் 28 மாநிலங்களுக்கு ₹20,735.20 கோடியும், தேசிய பேரிடர் மீட்பு நிதியத்தின் கீழ் 21 மாநிலங்களுக்கு ₹3,628.18 கோடியும் மத்திய அரசு விடுவித்துள்ளது.
மேலும், மாநிலப் பேரிடர் தணிப்பு நிதியத்திலிருந்து (SDMF) 23 மாநிலங்களுக்கு ₹5,373.20 கோடியும், தேசியப் பேரிடர் தணிப்பு நிதியத்திலிருந்து (NDMF) 21 மாநிலங்களுக்கு ₹1,189.56 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b