Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மார்ச் (ஹி.ச)
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனிலிருந்து நாள்தோறும் அதிகாலை 5.30 மணியளவில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு சென்னை விமானநிலையம் வந்து சேரும்.
பின்னர் இங்கிருந்து மீண்டும் காலை 7.35 மணியளவில் லண்டனுக்குப் புறப்பட்டு செல்வது வழக்கம்.
அதேபோல், நேற்று லண்டனிலிருந்து சென்னைக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்படத் தயார்நிலையில் நின்றிருந்தது.
அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, லண்டனிலிருந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்துக்கு வரவேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், அதேபோல் சென்னையில் இருந்து மீண்டும் இன்று காலை 7.35 மணியளவில் லண்டனுக்குப் புறப்பட்டு செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஆகியவற்றின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இதனால், சென்னையில் இருந்து இன்று காலை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலமாக லண்டன் செல்ல தயார்நிலையில் இருந்த 218 பயணிகள் பெரிதும் பரிதவித்தனர்.
அதேபோல் லண்டனிலிருந்து நேற்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலமாக சென்னை வரவேண்டிய சுமார் 250 பயணிகள் லண்டன் விமானநிலையத்தில் பரிதவித்து வருகின்றனர். இதுபற்றி அந்தந்த விமான நிலைய பயணிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது.
இந்த விமானம் நாளை அதிகாலை லண்டனிலிருந்து சென்னை வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடையே பரபரப்பு நிலவியது.
Hindusthan Samachar / vidya.b