Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர், 13 மார்ச் (ஹி.ச.)
பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரம் கிராமத்தில், நியாய விலைக்கடை எதிரே உள்ள இஸ்லாமிய தெருவில் வசிக்கும், சையதுஜாபர் மனைவி தாராபீ (65) என்ற மூதாட்டி, அவரது மெத்தை வீட்டில் தனது மகள் அஷரப்பீ (29), என்பவருடன் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், வீட்டின் பின்பக்க கதவை கடப்பாரை மூலம் தகர்த்து உள்ளே புகுந்த டவுசர் கொள்ளையர்கள் நான்கு பேர் கத்தியை காட்டி மிரட்டி, வெட்டி, இரும்பு ராடால் தலையில் தாக்கி 25 சவரன் தங்க நகைகளையும், 12 ஆயிரம் ரொக்க பணத்தையும் கொள்ளை அடித்துக் கொண்டு தப்பியோடி தலைமறைவாகினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் நிலைகுலைந்து ரத்தக் காயங்களுடன் மயங்கி கிடந்த தாராபீயும் அவரது மகள் அஷரபியும், சற்று முன் மயக்கம் தெளிந்து, எழுந்து செல்போன் மூலம் அளித்த தகவலின் பேரில், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். அனிதா தலைமையில், சம்ப இடத்திற்கு சென்ற மங்களமேடு போலீசார் பாதிக்கப்பட்டவர்களிடம் தாக்குதல் சம்பவம் குறித்தும், நகை பணம் கொள்ளை குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தின் மையப் பகுதியில் நிகழ்ந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் வாலிகண்டபுரம் வாழ் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
Hindusthan Samachar / ANANDHAN