Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மார்ச் (ஹி.ச)
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியானத்திலிருந்து அரசியல் கட்சிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. அன்புமணி ராமதாஸ் தரப்பு பா.ம.க. அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் நாளை (மார்ச் 19) சென்னை வர உள்ளார்.
இதன் காரணமாக அதிமுக - பாஜக இடையே ஓரிரு நாள்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
வருகிற மார்ச் 30 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளதால் இந்த வாரத்தில் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 20 ஆம் தேதி அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக கூட்டணியில் பாஜக குறைந்தது 30 தொகுதிகளையாவது பெறும் என்றும் சென்னையில் வேளச்சேரி, மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளைப் பெற முனைப்பு காட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b