Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மார்ச் (ஹி.ச.)
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, ஏற்கனவே தனது வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (19.03.2026) சென்னையில் வெளியிட்டார்.
சுமார் 462 பக்கங்கள் கொண்ட இந்த விரிவான அறிக்கையில் 49 தலைப்புகளில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதில் முக்கியமாக, நிர்வாக வசதிக்காகத் தமிழகத்திற்குத் திருச்சி உள்ளிட்ட 5 நகரங்களைத் தலைநகரங்களாக மாற்றுவோம் என்ற அதிரடி அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
அதில் நிர்வாகத் தலைநகரமாகத் திருச்சியும், தொழில்நுட்பத் தலைநகரமாகச் சென்னையும், தொழில் தலைநகரமாகக் கோவையும், பண்பாட்டுத் தலைநகரமாக மதுரையும் மெய்யியல் தலைநகரமாகக் கன்னியாகுமரியும் செயல்படும் என சீமான் தெரிவித்துள்ளார்.
60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். படிப்படியாக ஓராண்டிற்குள் மதுக்கடைகள் மூடப்படும். சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டை ஒழித்து தமிழ்க் குடிகளுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும். கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலும் ரத்து செய்யப்படும்.
ஆற்றுநீரைப் பயன்படுத்தும் குளிர்பான ஆலைகளுக்குத் தடை விதிக்கப்படும். குடிநீர் விற்பனை தடுக்கப்பட்டு அனைவருக்கும் இலவச குடிநீர் வழங்கப்படும். ஆங்கில மருத்துவப் படிப்பு தமிழ் வழியில் நடத்தப்படும். பாரதிதாசன் இயற்றிய ‘வாழ்வினில் செம்மை செய்பவள்’ என்ற பாடலே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்படும்
மேலும், அனைவருக்கும் அரசு வேலை, லஞ்சம் மற்றும் ஊழல் முற்றிலுமாக ஒழிப்பு, ஊழல் செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் போன்ற திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நீர்நிலை பாதுகாப்பு, இலவசத் தூய குடிநீர், உலகத்தரம் வாய்ந்த மருத்துவம், பெண்ணுரிமை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன் ஆகியவற்றிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது ஒரு வெறும் தேர்தல் அறிக்கையாக இல்லாமல், தங்களின் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு எனச் சீமான் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்களில் இலவசங்கள் அறிவிக்கப்படுவதை விமர்சித்துள்ள சீமான், அடிப்படை அமைப்பு மாற்றமே தங்களின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b