Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 19 மார்ச் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே கடந்த 10ஆம் தேதி மாலை இயற்கை உபாதைக்காக தனது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்ற வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி அதன் பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவளது உறவினர்கள் காட்டுப் பகுதிக்குள் சென்று தேடினர். இதனையடுத்து அவள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததது 11ஆம் தேதி காலை தெரியவந்தது. இதனையடுத்து உடற்கூறாய்வுக்காக மாணவியின் சடலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக குளத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்திற்குரிய நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதற்காக நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்.பி. மதன் ஆகியோர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்தால் மட்டுமே மாணவியின் உடலை வாங்குவோம் என அவரது பெற்றோரும், உறவினர்களுக்கு 9வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தற்போது வரை அவர்கள் மாணவியின் உடலை வாங்கவில்லை.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல் குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (வயது 30) என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த காற்றாலை அருகே இருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியிருந்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண் அடிப்படையில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் போலீசார் தர்ம முனீஸ்வரனைக் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவர் மீது ஏற்கனவே நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b