Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 20 மார்ச் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் 10 ஆம் தேதி காணாமல் போனார்.
தொடர்ந்து அடுத்த நாள், உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பின்னர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில்தான் தான் மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (30) என்பவர் பிடிபட்டார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் வயிற்று வலி ஏற்பட்டதாக தர்ம முனீஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பள்ளி மாணவியின் உடலை பெற்றோர்கள் வாங்கிக் கொண்டனர்.
தொடர்ந்து தற்போது, தர்ம முனிஸ்வரனை தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வந்து ஆஜர்படுத்தினர்.
Hindusthan Samachar / ANANDHAN