Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 23 மார்ச் (ஹி.ச.)
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 9ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 9ம் தேதி அரசு, தனியார் ஊழியர்களுக்கும், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை எவ்வித தடையுமின்றி ஆற்றுவதற்காக, அன்று ஒரு நாள் அரசு பொது விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த உத்தரவின்படி, புதுச்சேரி அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள் (பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்), பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அனைத்தும் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும்.
மேலும், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர் துறை அறிவுறுத்தியுள்ளது.
வாக்குப்பதிவு நாளன்று மதுக்கடைகளை மூடவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி மக்கள் அளிக்கும் வாக்குகள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு,
மே 4, 2026 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
Hindusthan Samachar / vidya.b