Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 23 மார்ச் (ஹி.ச)
திருவாரூர் அருகே மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 18 நாள் பங்குனித் திருவிழாவும், அதனைத் தொடர்ந்து 12 நாள் விடையாற்றி விழாவும் நடைபெறும்.
நடப்பாண்டிற்கான பங்குனித் திருவிழா மார்ச் 8 ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் முக்கிய நிகழ்வுகளான, வெள்ளி ஹம்ச வானத்தில் ராஜ அலங்கார சேவை, கோவர்த்தனகிரியில் கண்ணன் அலங்காரம், மரவுரிராமர் அலங்காரம், கண்டபேரண்ட பட்க்ஷி வாகனம், வண்ண புஷ்ப பல்லக்கு சேவை, தங்க சூர்யபிரபை, ஆண்டாள அலங்காரம், தங்க கருடவாகனம் ஆகியவை நடைபெற்றது.
16-ஆம் நாள் திருவிழாவான, இன்று காலை வெண்ணைத்தாழி உற்சவத்தை முன்னிட்டு காலையில் சுவாமி நவநீத சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, திருக்கோயிலின் நான்கு பிரகார வீதிகள், மேலராஜவீதி, காமராஜர்சாலை, பந்தலடி வழியாக காந்திசாலை வெண்ணைத்தாழி மண்டபம் சென்றடைந்தார்.
அப்போது, சாலையில் இருபக்கங்களில் திரண்டியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி மீது வெண்ணையை தெளித்து, கோபாலா, கோபாலா என பக்தி கோஷம் எழுப்பி பெருமாளை வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை உற்சவர் பெருமாள் செட்டி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். இரவு, தங்க குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில்(வையாளி) வெட்டுங்குதிரையில் எழுந்தருள்வார்.
நிகழ்ச்சியில், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சி. இளவரசன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கே.கே.பி.மனோகரன், லதா வெங்கடேஸ்வரன், மு.சிவக்குமார், கோயில் செயல் அலுவலர் எஸ்.மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b