Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 மார்ச் (ஹி.ச.)
மேற்கு ஆசிய மோதல் குறித்து விவாதிக்க அழைக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முன்னதாக, எல்பிஜி விநியோகப் பிரச்சினையை முன்னிறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சௌகத ராய் கூறியதாவது:
எல்பிஜி நெருக்கடியை அரசு முறையாக கையாளவில்லை. பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த நெருக்கடி விரைவில் தீர்க்கப்பட வேண்டும். என்றார்.
இது குறித்து சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:
பிரதமர் அவையில் இருந்தால், நாங்கள் எங்கள் ஆலோசனைகளை முன்வைப்போம். பல பரிந்துரைகள் எங்களிடம் உள்ளன. முதலில், தற்போதைய உலகளாவிய நெருக்கடியில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
பாகிஸ்தான் போன்ற நாடுகள் கூட தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. பிரதமர் மோடி டிரம்ப் உடன் மட்டும் அல்லாது எதிர்க்கட்சிகளுடனும் ஆலோசிக்க வேண்டும். என்றார்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி கூறியதாவது:
அரசு எல்லாம் நன்றாக இருப்பதாகக் கூறுகிறது. ஆனால் கிராமங்களிலும் நகரங்களிலும் எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது. நவராத்திரி மற்றும் ஈத் காலங்களில் கூட இந்த குறைபாடு தெளிவாக இருந்தது.
எனவே, எதிர்க்கட்சியாக நாங்கள் இந்த பிரச்சினையை முன்னிறுத்தி நாடாளுமன்ற வாயிலில் போராட்டம் நடத்துகிறோம். மக்களின் குரலை வலியுறுத்துவோம். என்றார்
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் மோதல் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அது ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் வர்த்தகக் கடல் போக்குவரத்தைக் கடுமையாக பாதித்துள்ளது.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய கூட்டு இராணுவத் தாக்குதல்களில், ஈரானின் 86 வயதான உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தது.
இதற்குப் பதிலடியாக, ஈரான் பல வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இலக்குகளைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் கடல் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டதுடன், உலக எரிசக்தி சந்தைகளிலும் சர்வதேச பொருளாதார நிலைத்தன்மையிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM