Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மார்ச் (ஹி.ச)
சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையத்தில், 734.91 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பிரமாண்ட நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நடைமேடை 10, 11ல் இதற்கான பணிகள் துவங்கி இருப்பதால், கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், கடந்த மாதம் 19ம் தேதி முதல், 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக கால அட்டவணைப்படி, 20 நிமிடத்துக்கு ஒரு மின்சார ரயில் இயக்குவதால், பயணியர் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது,
எழும்பூர் ரயில் நிலையத்தில் நடக்கும் மேம்பாட்டு பணியின் ஒரு பகுதியாக, நடைமேடை 10, 11ல் பிரமாண்ட நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள், கடந்த பிப்ரவரி 19ல் துவங்கப்பட்டன.
தவிர்க்க முடியாத நிலையில், கடற்கரை-செங்கல்பட்டு தடத்தில், மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பயணியரின் சிரமத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, எழும்பூர் நடைமேடை 10, 11ல் இரவு பகலாக மேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொண்டு வருகிறோம். தற்போது, 80 சதவீதம் பணிகள் முடித்துள்ளோம்.
எஞ்சியுள்ள பணிகள் அனைத்தும், வரும் ஏப்ரல் 5க்குள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம். அதன்பின், ஏற்கனவே இயக்கியதுபோல், இந்த தடத்தில் அனைத்து மின்சார ரயில்களும் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b