Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 29 மார்ச் (ஹி.ச.)
கடந்த 2023ம் ஆண்டில் ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவுக்கு எதிராக போரிட்டதுடன், உலகளாவிய எரிசக்தி மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு மிக முக்கியமான பாப் எல்-மண்டேப் ஜலசந்தியை முடக்கினர்.
இந்த சூழலில், தற்போது மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதால் செங்கடல் வழியாக சவுதி கச்சா எண்ணெய் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி, சவுதி அரேபியா இளவரசரும் அந்நாட்டின் பிரதமருமான முகமது பின் சல்மானுடன் இன்று தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.
இந்த ஆலோசனை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,
கடல்சார் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்யவும், கப்பல் போக்குவரத்து பாதைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் சவுதி இளவரசருடன் ஆலோசிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் உள்ள இந்திய சமூகத்தின் நலனுக்காக அவர் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.
வளைகுடா நாடுகளில் இந்தியாவின் எரிசக்தி தேவைகள் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியர்களின் நலன் கருதி, மோதல் தொடங்கியதிலிருந்து அனைத்து ஜிசிசி நாடுகளின் தலைவர்களுடனும் மோடி இருமுறை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b