Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 29 மார்ச் (ஹி.ச.)
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (30ம் தேதி) துவங்குகிறது.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்துார்பேட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு வழங்க வேண்டும்.
அதேபோல், ரிஷிவந்தியம் தொகுதிக்கு வாணாபுரம் தாலுகா அலுவலகமும், சங்கராபுரம் தொகுதிக்கு சங்கராபுரம் தாலுகா அலுவலகமும், கள்ளக்குறிச்சி (தனி) தொகுதிக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனுக்கள் அளிக்க வேண்டும். ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்பு மனு பெறப்படும்.
பொது விடுமுறை நாட்களான மார்ச் 31, ஏப்ரல் 1, 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வேட்புமனுக்கள் பெறப்படாது. மீதமுள்ள 4 நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். குறைந்த நாட்களே அவகாசம் இருப்பதால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், சுயேட்சைகள் அதிக அளவில் வேட்புமனு தாக்கல் செய்வர் என்பதால், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் நிறுத்துவதிற்கு வசதியாக, சாலையின் குறுக்கே கோடு வரையப்பட்டது.
100 மீட்டர் துாரத்தில் இருந்து வேட்பாளர் உட்பட 5 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர்.
போட்டியாளர்கள் பூர்த்தி செய்த வேட்பு மனு மற்றும் டெபாசிட் தொகையை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கி, அதற்கான ஒப்புகை ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b