Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 மார்ச் (ஹி.ச.)
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30 அன்று உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.
தென்னிந்தியாவின் அடையாளமாகவும், ஆரோக்கியமான காலை உணவாகவும் விளங்கும் இட்லியைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
உருவான வரலாறு:
2015-ஆம் ஆண்டு, சென்னையைச் சேர்ந்த இட்லி கடை உரிமையாளர் இனியவன் என்பவர் தான் இந்தத் தினத்தை முதன்முதலில் அறிவித்துக் கொண்டாடினார். சுமார் 1,328 வகை இட்லிகளைத் தயாரித்து சாதனை படைத்த அவர், மார்ச் 30-ஐ உலக இட்லி தினமாக மாற்றினார்.
இட்லியின் சுவாரசியமான உண்மைகள்:
வரலாறு - இட்லி சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது. 9-ஆம் நூற்றாண்டு கன்னட இலக்கியமான 'வட்டாராதனே'-வில் இது குறித்த குறிப்புகள் உள்ளன.
பெயர் காரணம் - 'இட்டு அவி' (பாத்திரத்தில் இட்டு அவித்தல்) என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து 'இட்லி' என்ற பெயர் மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மருத்துவ குணம் - ஆவியில் வேகவைக்கப்படுவதாலும், புளிக்கவைக்கப்பட்ட மாவில் தயாரிக்கப்படுவதாலும் இது எளிதில் செரிமானமாகும் உணவாகும். இதனாலேயே நோயாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முதல் உணவாக இட்லி உள்ளது.
பிரபலமான இட்லி வகைகள்:
இட்லியில் பல சுவையான வகைகள் உள்ளன.
காஞ்சிபுரம் இட்லி - மிளகு, சீரகம், இஞ்சி சேர்த்து மணக்க மணக்க தயாரிக்கப்படுவது.
குஷ்பு இட்லி - தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான மல்லிகைப்பூ போன்ற மென்மையான இட்லி.
ரவா இட்லி - அரிசி மாவுக்குப் பதில் ரவை கொண்டு தயாரிக்கப்படும் கர்நாடகாவின் சிறப்பு வகை.
தட்டே இட்லி - தட்டு போன்ற வடிவில் பெரிய அளவில் இருக்கும் இட்லி.
குட்டி (மினி) இட்லி - சாம்பாரில் மிதக்கும் சிறிய வகை இட்லிகள்.
உலகெங்கிலும் உள்ள தென்னிந்திய உணவகங்களில் இந்த நாளில் இட்லி பிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான சட்னி மற்றும் சாம்பாருடன் இந்த நாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM