Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 31 மார்ச் (ஹி.ச)
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது.
காங்கிரஸ், பாஜக தவிர மற்ற கட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். திமுக தேர்தல் அறிக்கையை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியிட்டார்.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவாரூரில் இருந்து இன்று (மார்ச் 31) பரப்புரையை தொடங்குகிறார். இதன்படி இன்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து இன்று அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
திருவாரூரில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தஞ்சாவூர் சென்ற முதல்வர், அங்கிருந்து பிரசார வாகனத்தில் சாலை வழியாக பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், தஞ்சாவூர் அடுத்த சாலியமங்கலம் அருகே முதல்வர் ஸ்டாலின் சென்று கொண்டிருந்தபோது அவரின் வாகனத்தை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனைக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள அஞ்சுகம் அம்மையார் நினைவகத்தில் மரியாதை செலுத்தினார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக முதல்வர் இன்று வாக்கு சேகரிக்கவுள்ளார்.
இன்று மாலை 5 மணியளவில் திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றவுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b