Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 மார்ச் (ஹி.ச)
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
அனைத்து தொகுதிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்து மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் தேர்தல் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் காலத்தில் நீண்ட நேரம் பணியாற்றும் பணியாளர்களுக்கு இது ஊக்கமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஊதியம் ரூ.1,700-இல் இருந்து ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு அலுவலர் ஊதியம் ரூ.1,300-இல் இருந்து ரூ.2,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் ஊதியம் ரூ.850-இல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் உதவியாளர் ஊதியம் ரூ.650-இல் இருந்து ரூ.1,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நுண் பார்வையாளர் (Micro Observer) ஊதியம் ரூ.1,000-இல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உயர்வு தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு நேரடி நன்மை அளிக்கும் என கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b