Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 06 மார்ச் (ஹி.ச.)
இந்தியாவின் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவர் அனில் அம்பானி. அவர் அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர்.
ரிலையன்ஸ் பவர் போன்ற பல கம்பெனிகளை அவர் நடத்தி வருகிறார். ரிலையன்ஸ் பவர் உட்பட ரிலையன்ஸ் குழுமத்தின் பெயரில் வாங்கிய கடனை, சட்டத்திற்குப் புறம்பாக மற்ற கம்பெனிகளுக்கு மாற்றியதாக அனில் அம்பானி மீது புகார் வந்தது.
விசாரணையில், அனில் அம்பானி சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு போட்டது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கிற்காக அனில் அம்பானி வீடு, அலுவலகம் உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்தது.
மேலும், அனில் அம்பானிக்கு அறிவிப்பு அனுப்பி அமலாக்கத்துறை விசாரித்தது. அதுமட்டுமின்றி, பண மோசடி வழக்கில் அனில் அம்பானியின் சுமார் 15 ஆயிரத்து 700 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கியுள்ளது.
தற்போது, பண மோசடி வழக்கு சம்பந்தமாக ரிலையன்ஸ் பவர் கம்பெனி மற்றும் தொடர்புடைய இடங்களில் இன்று அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி வருகிறது.
மும்பை, ஹைதராபாத் ஆகிய இரண்டு பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM