Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 07 மார்ச் (ஹி.ச.)
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள துறைத் தலைவர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு, இன்று (07.03.2026) திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை தலைமை தாங்கினார்.
இப்பயிற்சி வகுப்பில், இந்திய தேர்தல் ஆணையம் விதித்துள்ள விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது குறித்து அலுவலர்களுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
மேலும்,தேர்தலைச் சிறப்பாக நடத்த தேர்தல் விழிப்புணர்வுக் குழு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மேலாண்மைக் குழு, மனிதவள மேலாண்மைக் குழு, பயிற்சிக் குழு, தேர்தல் உபகரணங்கள் குழு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடி கண்காணிப்புக் குழு, தபால் வாக்கு மற்றும் வாக்குச்சீட்டுக் குழு, ஊடகக் கண்காணிப்புக் குழு, வாக்காளர் பட்டியல் கண்காணிப்புக் குழு, போக்குவரத்து மேலாண்மைக் குழு, சைபர் பாதுகாப்பு மற்றும் சமூக ஊடகக் கண்காணிப்புக் குழு என 11 வகையான முக்கியக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவற்றுக்கான பொறுப்பு அலுவலர்கள் மற்றும் உதவிப் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு குழுவும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து டெல்லி மற்றும் சென்னையில் பயிற்சி பெற்ற சிறப்புப் பயிற்சியாளர்கள் மூலம் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
குறிப்பாக, வாக்காளர்களுக்கான உதவிக்குழுவின் செயல்பாடுகள் மற்றும் இணையதளப் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஐயப்பன் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு), சந்திரசேகர் (தேசிய நெடுஞ்சாலை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, தேர்தல் வட்டாட்சியர் முருகன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b