Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 09 மார்ச் (ஹி.ச.)
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தோ்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த தேர்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தொடங்கியது.
ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், நாட்டின் பல இடங்களில் இணையதளம் முடங்கிது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் கடந்த 4 நாட்களாகவே பிரச்னை இருந்து வந்த நிலையில், பலரும் விண்ணப்பிக்க முடியாத நிலை இருந்தது.
இதையடுத்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் 11ஆம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது கடந்த
பிப்.8-ம் தேதி https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தொடங்கியது. மார்ச் 8-ம் தேதி (நேற்று) நள்ளிரவு 11.50 மணியுடன் ஆன்லைனில் விண்ணப்பிப்பது நிறைவடைய இருந்தது.
இந்த நிலையில், மாணவ, மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை வரும் 11-ம் தேதி நள்ளிரவு 11.50 வரை நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
இதுவரை 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.
மே 3-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் தேர்வு நடைபெறவுள்ளது.
துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூர் என வெளிநாடுகளில் 14 இடங்களிலும் தேர்வு நடைபெறுகிறது.
தேர்வு மையம், ஹால் டிக்கெட் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
Hindusthan Samachar / vidya.b