Enter your Email Address to subscribe to our newsletters

கரூர்Tami, 09 மார்ச் (ஹி.ச.)
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜெகதாபி கிராமத்தில் அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
ஆனால் அந்த பகுதியில் இதுவரை குடிநீர் வசதி, சமுதாயக் கூடம், பொதுக் கழிப்பிடம், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறிய அவர்கள், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்தனர்.
அப்போது 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களை எடுத்துக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தி மனு அளித்தனர்.
மேலும், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவில்லை என்றால் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கருப்புக்கொடி கட்டி தேர்தலை புறக்கணிப்போம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
Hindusthan Samachar / Durai.J